தொட்டியம் அருகே தீ விபத்து: 4 குடிசைகள் தீயில் எரிந்து நாசம் - 4 ஆடுகள் கருகி செத்தன


தொட்டியம் அருகே தீ விபத்து: 4 குடிசைகள் தீயில் எரிந்து நாசம் - 4 ஆடுகள் கருகி செத்தன
x
தினத்தந்தி 22 Oct 2020 10:30 PM GMT (Updated: 23 Oct 2020 2:49 AM GMT)

தொட்டியம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானதுடன், 4 ஆடுகளும் தீயில் கருகி செத்தன.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள ஏரிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. விவசாய கூலி தொழிலாளியான இவரது குடிசையில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த அங்கமாள், கோவிந்தராஜ், மனோன்மணி ஆகியோரின் குடிசைகளுக்கும், ஆட்டு கொட்டகை, சமையல் கொட்டகைக்கும் பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து முசிறி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 குடிசைகளில் இருந்த பீரோ, கட்டில், பாத்திரங்கள், சமையல் பொருட்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் மனோன்மணிக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையில் கட்டியிருந்த 4 ஆடுகள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானது. ஒரு ஆட்டை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தீ விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ளவர்கள் விவசாய வேலைக்கு சென்று இருந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவலறிந்த தொட்டியம் தாசில்தார் மலர், வருவாய் ஆய்வாளர் ரகுநாத், தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தொட்டியம் போலீசார் இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story