இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர கோரிக்கை


இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர கோரிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2020 3:37 AM GMT (Updated: 30 Oct 2020 3:37 AM GMT)

நீடாமங்கலம் அருகே இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம் உள்ளது. எனவே சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீடாமங்கலம், 

நீடாமங்கலம் ஒன்றியம் தேவங்குடி அக்ரகார தெரு மற்றும் மேட்டுத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாராவது இறந்தால் அவரின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவரின் உடலை குளத்தில் இறங்கியும், வயல் வழியாகவும் எடுத்து சென்று அடக்கம் செய்யும் அவலம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தேவங்குடி அக்ரகார தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது85) என்பவர் இறந்தார். நேற்று அவரது இறுதிச்சடங்குகள் நடந்தது. வீட்டிலிருந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். அப்போது சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி சென்றனர்.

சாலை அமைத்து தர வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

மேட்டூர் அணை திறந்து தண்ணீர் வந்ததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழை காலங்களில் இப்பகுதியில் யாராவது இறந்துவிட்டால் அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம். சுடுகாட்டிற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்றனர். 

Next Story