திருச்செந்தூரில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்


திருச்செந்தூரில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2020 2:24 AM GMT (Updated: 1 Nov 2020 2:24 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும், ஆழ்வார் கற்குளம் கூட்டுறவு வங்கி தலைவருமான அய்யாத்துரை பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ராஜேந்திரன், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணபெருமாள், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பராக்கிரம பாண்டி பஞ்சாயத்து தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்- பா.ஜ.க.

ஸ்ரீவைகுண்டம் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் வட்டார துணைத்தலைவர் அலங்கார பாண்டியன், நகர தலைவர் சித்திரை ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஐ.என்.டி.யு.சி சுந்தர்ராஜ், நகர செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொது செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பார்வர்டு பிளாக்

இதனை தொடர்ந்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் தேவர் தலைமையில், மகாராஷ்டிரா மாநில தேவர் பேரவை பொது செயலாளர் அங்கப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொது செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சீர்மரபினர் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் ஹரிஹரன், சீனி பாண்டியன், கண்ணன், ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.ம.மு.க.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், நகர அ.ம.மு.க. சார்பில் நடந்த விழாவிற்கு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் புவனேஸ்வரன், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து வல்லநாடு தம்புராட்டியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு, தி.மு.க. சார்பில் சண்முகையா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொம்பையா, வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மாசிலா மணி, வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் முருகன், கோயில்பத்து பஞ்சாயத்து தலைவர் கொம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாநில விவசாய அணி துணை செயலாளர் கண்ணன் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பேரவையினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் சத்யா நகர் மற்றும் பஸ்நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவப்படம் மற்றும் புளியங்குளம், மீனாட்சிபுரம், ஆதனூர், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முத்துராமலிங்க தேவரின் உருவ சிலைகளுக்கு பி.சின்னப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் பால்ராஜ், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் விளாத்திகுளம், புளியங்குளம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவர் சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலர் வேலுச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலர் சின்ன மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் வட்டார முக்குலத்தோர் இளைஞரணி மற்றும் பசும்பொன் தேசிய கழகம் சார்பில் பஸ்நிலையம் அருகே நடந்த விழாவுக்கு, முக்குலத்தோர் மகாஜன சங்க தலைவர் சுப்பிரமணிய தேவர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பரமசிவ தேவர், பசும்பொன் தேசிய கழக மாவட்ட செயலாளர் பொன். பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலர் மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஸ்நிலையம் முன்பு உள்ள கொடி கம்பத்தில் முக்குலத்தோர் சமுதாய கொடி ஏற்றப்பட்டு முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாநில தொண்டரணி செயலர் மாரி மறவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்யாண சுந்தரம், தயாளன், பாலமுருகன், கார்த்திக், தர்மதுரை, முத்துராஜ், விஜயராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சிங்கத்தமிழன் விகடன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் காளிதாஸ், மாரிமுத்துகுமார் சின்னத்துரை, ஆறுமுகம், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சோடா ரவி, பனங்காட்டு மக்கள் கழக ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம்

எட்டயபுரத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் முத்துவேல் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆத்திராஜ், எட்டயபுரம் ஒன்றிய தலைவர் ராம்கி, பொது செயலாளர் நாகராஜன், ஓ.பி.சி. அணி ஒன்றிய தலைவர் ஹரிஹரசுதன் உள்ளிட்ட பலர் தேவர் சிலைக்கு மரியாதை செய்தனர்.

அ.தி.மு.க. சார்பில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் கட்சியினர் தேவரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் உதயகுமார், அவை தலைவர் கணபதி, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் மாரிமுத்து பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தலைமையில் தி.மு.க.வினர் தேவர் சிலைக்கு மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், மாவட்ட பிரதிநிதி பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு

கயத்தாறு அருகே உள்ள ஆதனூரில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் முக்குலத்தோர் புலிப்படையின் கிழக்கு ஒன்றிய தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமுருகன், மாவட்ட துணை தலைவர் ஐவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் முத்துகுமார், முத்துராமலிங்கம், ஒன்றிய தலைவர் பாண்டியன், ஒன்றிய கொள்கை சோமு தேவர், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story