போதைப்பொருள் வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளரின் மனைவிக்கு ஜாமீன்


போதைப்பொருள் வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளரின் மனைவிக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 10 Nov 2020 8:09 PM GMT (Updated: 10 Nov 2020 8:09 PM GMT)

போதைப்பொருள் வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளரின் மனைவிக்கு ஜாமீன் வழங்கி மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை, 

இந்தி திரையுலகிற்கும், போதை பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் சுல்தான் என்ற போதை பொருள் கும்பலை சேர்ந்தவரை பிடித்தனர். விசாரணையில், அவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் மனைவி சபீனா செய்யதுக்கு போதை பொருள் விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் ஜூகுவில் உள்ள தயாரிப்பாளரின் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளரின் மனைவி சபீனா செய்யது கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

ஜாமீனில் விடுவிப்பு

இந்தநிலையில் சபீனா செய்யது ஜாமீன் கேட்டு மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.எச். காஷிகர் அமர்வு முன் நடந்தது. அப்போது சபீனா செய்யது தரப்பில் ஆஜரான வக்கீல், அவர் தற்போது கணவரை பிரிந்து வாழ்வதால் குழந்தைகளை கவனிக்க வேண்டி உள்ளது என்றார்.

மேலும் சபீனா செய்யதின் வீட்டில் சிறிய அளவில் தான் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அவர் போதை பொருள் விற்பனை செய்பவர் இல்லை என்றும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, கைதான சபீனா செய்யதை ஜாமீனில் விடுவித்து உத்தரவி்ட்டார்.

Next Story