பாலூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


பாலூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 22 Nov 2020 3:25 PM GMT (Updated: 22 Nov 2020 3:25 PM GMT)

பாலூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு தயார் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா யாக பூஜைகளுடன் தொடங்கியது. விக்னேஷ்வரர் பூஜை, கோபூஜை, கலச பூஜை நடைபெற்று கணபதி, நவக்கிரக ஹோமம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன. மூன்றாம் கால யாக பூஜைக்கு பின்னர் மூலவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கரிக்கோல வீதி உலா வந்து அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது.

பின்னர் கடம்புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து கோபுர கலசம், கோவில் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மன் மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலூர் சம்பத் தலைமை தாங்கினார். மகா கும்பாபிஷேக விழாவினை மகாதேவ மலை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் கலந்து கொண்டு நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

விழாவில் சிறப்பு அழைபபாளர்களாக அமைச்சர் கே.சி.வீரமணி, மகாதேவ மலை சித்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பாலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர். விழா நடந்த 3 நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. பாலூர் சம்பத் தலைமையில் ஆர்.ஜி.ஆர் பால்கோவா கம்பெனி மற்றும் ஈசார் பெட்ரோல் டீலர் கோவிந்தராஜ், கூட்டுறவு சங்க இயக்குனர் லோகநாதன், சண்முகம், பாலாஜி, ரமேஷ் உள்ளிட்ட திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Next Story