கடையம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கடையம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 Nov 2020 11:54 PM GMT (Updated: 23 Nov 2020 11:54 PM GMT)

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கடந்த 15 நாட்களாக கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

கடையம், 

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கடந்த 15 நாட்களாக கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த வாரம் மாவட்ட கலெக்டரிடம் மனு செய்தனர். இந்த நிலையில் ரவணசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் அனுராதா ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அடைச்சாணி கிராமத்திற்கு இவருக்கு பணி மாறுதல் உத்தரவு வந்துள்ளது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்கக்கோரி நேற்று காலை ரவணசமுத்திரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முகமது உசேன், ஜமாத் தலைவர்கள் முகமதுஅசன், சாகுல்ஹமீது, வீராசமுத்திரம் காஜாமைதீன், கடையம் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன், எஸ்.டி.பி.ஐ. துரை முன்னா இப்ராகிம், யாக்கோபு ஊர் தலைவர் பரமசிவன், அ.தி.மு.க. கிளைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்ததும் கடையம் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அலுவலகம் உடனடியாக திறக்கப்படும் என கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் தென்காசி தாசில்தார் சுப்பையன் உத்தரவுப்படி மாலையில் கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்டது.

Next Story