நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் விண்ணப்பிக்க 30-ந் தேதி கடைசி நாள்


நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் விண்ணப்பிக்க 30-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 25 Nov 2020 12:16 AM GMT (Updated: 25 Nov 2020 12:16 AM GMT)

தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

தென்காசி, 

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020-2021-ன் கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பேருக்கு 1,000 எண்ணம் கொண்ட நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் கோழி வளர்ப்பில் ஆர்வம் மற்றும் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். 1,000 கோழிகள் வளர்ப்பதற்கு ஏதுவாக சொந்தமாக கோழி கொட்டகை அமைக்க தகுதி உடையவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 2,500 சதுர அடி கொண்ட கோழி கொட்டகை அமைக்க ஏதுவாக இடம் வைத்திருப்போராக இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

கோழிகள் வளர்க்க தேவைப்படும் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் குவளை ஆகியவற்றை அவராகவே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர் தேர்வு செய்யப்படுவார்கள். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை உண்டு.

கிராம ஊராட்சியை சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினர் கட்டாயமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். முந்தைய நிதி ஆண்டுகளில் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி பண்ணை மற்றும் கறிக்கோழி பண்ணை திட்டங்களில் பயன் அடைந்தவராக இருக்கக்கூடாது. தொடர்ந்து 3 வருடம் நாட்டுக்கோழி பண்ணை செயல்படுத்த உறுதி வழங்க வேண்டும்.

கோழி வளர்ப்பு பயிற்சி

மேலும் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 1,000 நாட்டுக்கோழிகள் கொள்முதல் செய்வதற்கும், தீவனம் வாங்குவதற்கும் மற்றும் குஞ்சு பொரிப்பகம் வாங்குவதற்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு 5 நாட்கள் கோழி குஞ்சு பொரிப்பு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று வருகிற 30-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story