வேல் யாத்திரை நிறைவு கூட்டத்தில் குமரியில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்


வேல் யாத்திரை நிறைவு கூட்டத்தில் குமரியில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Nov 2020 3:41 AM GMT (Updated: 29 Nov 2020 3:41 AM GMT)

குமரி மாவட்டத்தில் இருந்து வேல் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜனதா கட்சி சார்பில் தமிழகத்தில் வேல் யாத்திரை நடந்து வருகிறது. இந்த வேல்யாத்திரை வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. அன்று அங்கு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வாகனங்களில் சென்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற-சட்டசபை தேர்தல்

வருகிற ஜனவரி மாதம் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே நாம் இந்த தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். அதற்கான பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 25 பேரை நியமிக்க வேண்டும்.

அதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு அதிக இடங்களை அமித்ஷா கேட்டுள்ளார். குமரி மாவட்டத்திலும் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதுடன், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக நாம் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கூட்டத்தில் மாநில செயலாளர் உமாரதி, மாவட்ட துணைத்தலைவர் தேவ், பொருளாளர் முத்துராமன், பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்கம், சுரேஷ், வினோத், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் ராஜன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story