தேனியில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தேனியில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2020 1:28 AM GMT (Updated: 20 Dec 2020 1:28 AM GMT)

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

தேனி, 

தேனி அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பு பகுதியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் சமையல் கியாஸ் சிலிண்டரை வைத்து மாநில துணை பொதுச்செயலாளர் தமிழரசி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தலித்ராயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மாரி மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

தேனி அல்லிநகரம் காந்திநகரில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுபோல ஆண்டிப்பட்டியில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சிவகாசி தொகுதி முன்னாள் எம்.பி. அழகிரிசாமி தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் ராமர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story