மராட்டிய மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு சட்டமன்ற தேர்தல் மின்னணு வாக்குப்பதிவுக்கான எந்திரங்கள் வருகை; கலெக்டர் விஷ்ணு ஆய்வு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, கலெக்டர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆய்வு
x
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, கலெக்டர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆய்வு
தினத்தந்தி 20 Dec 2020 1:44 AM GMT (Updated: 20 Dec 2020 1:46 AM GMT)

நெல்லை மாவட்டத்துக்கு சட்டமன்ற தேர்தலுக்கு உரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து நேற்று கொண்டு வரப்பட்டன. அவற்றை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் கமிஷன் இதற்கான வேலைகளை முனைப்புடன் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், பெயர் சேர்ப்பு முகாம் ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதைெயாட்டி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நெல்லைக்கு வருகை
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டன. மராட்டிய மாநிலம் ஜல்னா மற்றும் அகமத் நகர் ஆகிய 2 மாவட்டங்களில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்ட அவை நெல்லை ராமையன்பட்டியில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
20 சதவீதம் அதிகம்
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 1,475 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இங்கு சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் கமிஷன் அனுப்பி வைத்துள்ளது. இதில் 1,020 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,490 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2,710 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவிகள் வந்துள்ளன.

ஏற்கனவே நம்மிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2,950, கட்டுப்பாட்டு எந்திரம் 1,474 மற்றும் வி.வி.பாட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி 1,475 ஆகியவை குடோனில் வைக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் தேர்தலுக்கு தேவையான எந்திரங்களை விட கூடுதலாக 20 சதவீதம் எந்திரங்கள் கையிருப்பு உள்ளன.

தேர்தல் நடவடிக்கை
இந்த எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து சரியாக இயங்குகிறதா? என்று ஆய்வு செய்துதான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு வாரத்தில் சரியாக செயல்படுகிறதா? என்பது மீண்டும் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகு தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அடுத்தடுத்து தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டருடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story