தஞ்சை திரு இருதய பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை


தஞ்சை திரு இருதய பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 25 Dec 2020 3:37 AM GMT (Updated: 25 Dec 2020 3:37 AM GMT)

தஞ்சை திரு இருதயபேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர்,

ஏசு பிறந்த நிகழ்வை கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி தஞ்சை திரு இருதய பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திரு இருதய பேராலய பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் கூட்டுதிருப்பலி நடந்தது. இதில் ஏசுவின் பிறப்பினை நினைவு கூரும் வகையில் சூசையப்பர், கன்னிமரியாள் வேடமணிந்த இருவர் குழந்தை ஏசுவின் சொரூபத்தை கையில் ஏநதி வந்து பங்குத்தந்தை இருதயராஜ் கையில் வழங்கினர்.

கூட்டுப்பாடல் திருப்பலி

அதை பெற்றுக்கொண்ட அவர் சொரூபத்தை புனிதம் செய்து மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தார். அப்போது தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது. பின்னர் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. திருப்பலி முடிந்தவுடன் பங்குத்தந்தை கிறிஸ்துமஸ் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

விழாவில் உதவி பங்குத்தந்தை அலெக்ஸ், மைக்கேல், சகோதரர் கிட்டேரிமுத்து மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேராலய துணைத்தலைவர் வின்சென்ட், செயலாளர் குழந்தைராஜ் மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

கொரோனா தொற்று

வழக்கமாக கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நேற்று சிறப்பு பிரார்த்தனை இரவு 9 மணி முதல் 10 மணிவரை நடைபெற்றது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு பிரார்த்தனை இன்று அதிகாலை 5.45, காலை 7.15, 9, 11 மற்றும் மாலை 6 மணிக்கும் நடைபெறுகிறது.

இதே போல் தஞ்சையில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story