மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையத்தை சி.ஐ.டி.யூ.வினர் முற்றுகையிட முயற்சி


மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையத்தை சி.ஐ.டி.யூ.வினர் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 7 Jan 2021 3:26 AM GMT (Updated: 7 Jan 2021 3:26 AM GMT)

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சி.ஐ.டி.யூ.வினர் 50 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் முனியாண்டி, கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். 40 நாட்களுக்கும் மேலாக டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குறைந்த சம்பளத்தில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, தொழிலாளர்களை கொத்தடிமையாக மாற்றியுள்ள தொழிலாளர் நல திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். கொரோனா காலத்தில் வேலையிழந்து, வருமானம் இழந்துள்ள விவசாய தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வீதம் 6 மாத காலத்திற்கு வழங்க வேண்டும்.

முற்றுகையிட முயற்சி

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியை ரூ.700 ஆக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 50 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்தனர்.

Next Story