விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Jan 2021 4:43 AM GMT (Updated: 12 Jan 2021 4:43 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.1.2021 தொடங்கிய காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கண் பார்வையற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.

இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 31.12.2020 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.3.2021 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும் இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story