மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய நிலையில் சரத்பவாருடன் நடிகர் சோனு சூட் சந்திப்பு
மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகர் சோனு சூட் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார்.
மும்பை,
இந்தி நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். அப்போது அவருக்கும் மாநிலத்தை ஆட்சி செய்யும் சிவசேனாவுக்கும் உரசல் ஏற்பட்டது. இதற்கிடையே நடிகர் சோனு சூட் மும்பை ஜூகுவில் உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அந்த நோட்டீசை எதிர்த்து சோனு சூட் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
இதேபோல சோனு சூட் குடியிருப்பு கட்டிடத்தில் சட்டவிரோதமாக ஓட்டல் நடத்தி வருவதாகவும் அவர் மீது மும்பை மாநகராட்சி ஜூகு போலீசில் புகார் அளித்து உள்ளது.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மும்பையில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடிகர் சோனு சூட் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் மாநகராட்சியின் நோட்டீஸ் தொடர்பாகவே அவர் சரத்பவாரை சந்தித்து பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story