மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்லும் பணி தொடங்கியது


மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்லும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 14 Jan 2021 1:51 AM GMT (Updated: 14 Jan 2021 1:51 AM GMT)

மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு கொண்டு செல்லும் பணி தொடங்கி உள்ளது.

மும்பை, 

இங்கிலாந்தின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்படி வருகிற 16-ந் தேதி நாடு முழுவதும் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட உள்ளது.

இதையடுத்து புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து மராட்டியத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 56 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்காக புனேயில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்ட தடுப்பு மருந்துகள் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பணி நேற்று தொடங்கியது. காலை 5.20 மணியளவில் 24 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துடன் புறப்பட்ட கோஏர் விமானம் 6.30 மணியளவில் கோவா சென்றடைந்தது.

இதேபோல லக்னோ, கொச்சின், சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கும் மும்பை விமான நிலையத்தில் கோஏர் விமானம் மூலம் தடுப்பு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து விமான நிலைய ஊழியர் ஒருவர் கூறும்போது, மும்பை விமான நிலையத்தில் இருந்து 16 இடங்களுக்கு தடுப்பு மருந்து எடுத்த செல்லப்பட உள்ளது என்றார்.

Next Story