ஏற்காட்டில் தொடர் மழை: 10 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஏற்காடு,
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சாரல் மழை மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இரவு 3 மணி நேரம் நீடித்த சாரல் மழையால் ஏற்காடு-நாகலூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
மேலும் மின் கம்பிகள் மீதும் விழுந்ததால் நாகலூர், கரடியூர், செம்மநத்தம், முளுவி, கடுக்காமரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்கபட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
Related Tags :
Next Story