தண்ணீரில் மிதக்கும் டெல்டா; மூழ்கிய பயிர்கள் அழுகும் அபாயம்: அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர்


தண்ணீரில் மிதக்கும் டெல்டா; மூழ்கிய பயிர்கள் அழுகும் அபாயம்: அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர்
x
தினத்தந்தி 14 Jan 2021 5:40 AM GMT (Updated: 14 Jan 2021 5:40 AM GMT)

தொடர்ந்து பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் பயிர்கள் மூழ்கியதால் அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கும்பகோணம், 

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கும்பகோணம் பகுதியில் பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. கும்பகோணம் மோதிலால் தெரு அருகே உள்ள சேய் குளத்தில் மழைநீர் நிரம்பிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பணியாளர்கள் குளத்தில் உள்ள நீரை மோட்டார் பம்பு மூலம் தாழ்வான பகுதிக்கு வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க குளத்தை சுற்றி நடைபயிற்சி செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பபட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

வியாபாரம் பாதிப்பு

கும்பகோணம் பகுதியில் பெய்துவரும் கனமழையால் பொங்கல் பண்டிகை வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். இந்த வருடம் பொங்கல் வியாபாரிகளுக்கு கருப்பு பொங்கல் என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கும்பகோணம் பகுதியில் பொங்கல் களையிழந்து காணப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழைத்தார் போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள், மழையால் வியாபாரம் இன்றி தாங்கள் கொண்டுவந்த பொருட்களை சாலையில் போட்டுவிட்டு விரக்தியுடன் திரும்பி சென்றனர்.

ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் வாழவாதாரம் பாதிக்கப்பட்டிருந்த வியாபாரிகளும், விவசாயிகளும் பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில் மழையால் பொங்கல் வியாபாரமும் பாதிக்கப்பட்டதையடுத்து செய்வதறியாது விரக்தியுடன் இருந்துவருகின்றனர்.

விஷ பூச்சிகள்

கும்பகோணம் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் நகரம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. .

குறிப்பாக கும்பகோணம் புதிய பஸ் நிலையம், ஜான் செல்வராஜ் நகர், மோதிலால் தெரு, ஸ்ரீநகர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மழைநீரில் பாம்பு, தேள் போன்ற கொடிய விஷஜந்துக்கள் நீந்தி வருவதால் சிறுவர்கள், பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.

மழைநீரோடு கழிவுநீர் கலந்து வழிந்தோடுவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் மழைநீர் நிரம்பியுள்ள நிலையில் அதோடு கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.

திருநாராயணபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் சார்பு நிறுவனமான டான்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலகம் ப குதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியே சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வரும் அலுவலக கட்டிடம் மழைநீர் கசிந்து எந்நேரமும் இடிந்து விழுந்துவிடும் அபாய நிலையில் இருந்துவருகிறது.

கபிஸ்தலம்

கபிஸ்தலம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் 2 கூரை வீடுகள் இடிந்து விழுந்து நாசம் ஏற்பட்டது. ஒரு கன்று குட்டி இறந்தது. கபிஸ்தலம் அருகே உள்ள பொன்பேத்தி கிராமம் தெற்கு தெருவில் வசிக்கும் ரத்தினம் மகன் ராஜாராமன் வயது 50 என்பவருக்கு சொந்தமான கூரைவீடு தொடர் மழையில் முழுவதும் இடிந்து விழுந்தது சேதம் ஏற்பட்டது. புத்தூர் வெள்ளாளர் தெருவில் வசிக்கும் ராஜமாணிக்கம் மனைவி மங்களம் என்பவரது கூரை வீடு இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது.

மெலட்டூர்

மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை ஊராட்சிக்கு உட்பட்ட நிம்மேலி ‌சாலை பகுதியில் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்டு இன்னும் சில வாரங்களில் அறுவடை செய்யக்கூடிய பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற் பயிர்கள் தண்ணீரில் அழுகி முளைத்துவிடும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்பாபநாசம் தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இரும்புதலை, அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக இப்பகுதியின் முக்கிய பாசன வாய்க்கால்கள் வயல்களில் அதிக அளவில் மழை தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் அதிக அளவில் தண்ணீர் புகுந்ததால் இப்பகுதியில் பயிர்செய்யப்பட்டு இன்னும் சில வாரங்களில் அறுவடை செய்யக்கூடிய நிலையில் இருந்த பல ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன. நெற்பயிர்கள் அழுகி நெல்மணிகள் வீணாகும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Next Story