கொலைக்கு பழி வாங்கும் விதமாக வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு; இறந்து விட்டதாக நினைத்து விட்டு சென்றதால் உயிர் தப்பினார்


கொலைக்கு பழி வாங்கும் விதமாக வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு; இறந்து விட்டதாக நினைத்து விட்டு சென்றதால் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 16 Jan 2021 8:30 PM GMT (Updated: 16 Jan 2021 7:20 PM GMT)

கொலைக்கு பழி வாங்கும் விதமாக மர்மநபர்கள் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவர் இறந்து விட்டதாக நினைத்து விட்டு சென்றதால் உயிர் தப்பினார்.

வாலிபருக்கு வெட்டு
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், பரணிபுத்தூர் அருகே சாலையின் அருகே இருந்த முள்புதரில் இருந்து நள்ளிரவில் பலத்த வெட்டு காயங்களுடன் ஒரு வாலிபர் எழுந்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டார். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் நின்று பார்த்தபோது பலத்த வெட்டுக்காயத்துடன் இருந்த நபரை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மாங்காடு போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைந்து வந்து பலத்த வெட்டுக்காயங்களுடன் இருந்த நபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை வழக்கில் தொடர்புடையவர்
இதுகுறித்து மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டுப்பட்ட நபரிடம் விசாரித்த போது அவர் வியாசர்பாடியை சேர்ந்த சூர்யா என்ற சூரியபிரகாஷ் (19) என்பதும் வியாசர்பாடியில் பிரசாந்த் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதே கொலை வழக்கில் தொடர்புடைய இவரது நண்பர் பாலச்சந்தர் என்பவர் சாலை விபத்தில் இறந்து போனார். அவரது சாவுக்கும் சூரியபிரகாஷ் செல்லவில்லை. பிரசாந்த் கொலைக்கு பழி வாங்குவதற்காக அவரது உறவினர்கள் இருவரையும் தேடி வந்தநிலையில் பாலச்சந்தர் இறந்துவிட்டதால் சூர்யபிரகாஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரது முகவரியை தேடியபோது வியாசர்பாடியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாம்பரத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் தாம்பரத்திற்கு சென்ற பிரசாந்தின் நண்பர்கள் சூரியபிரகாசை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் வழியாக வந்து கொண்டிருந்த போது சாலையின் ஓரமாக இருந்த முள்புதர் பகுதியில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சூரிய பிரகாஷ் இறந்துவிட்டதாக நினைத்து அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டனர்.

5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிர் பிழைத்து எழுந்து வந்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீனா, விக்ரம் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கு பழி வாங்கும் விதமாக வாலிபரை வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story