மதுரையில் மல்லிகை ஏற்றுமதி மையம்; மாணிக்கம் தாகூர் எம்.பி. தகவல்


மாணிக்கம் தாகூர் எம்.பி
x
மாணிக்கம் தாகூர் எம்.பி
தினத்தந்தி 16 Jan 2021 10:17 PM GMT (Updated: 16 Jan 2021 10:17 PM GMT)

மதுரையில் மல்லிகை ஏற்றுமதி மையம் அமைய உள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

மல்லிகை விவசாயம்
மதுரை திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற கூட்ட தொடரில் கடந்த அக்டோபர் 15-ந்தேதி மற்றும் டிசம்பர் 15-ந்தேதி கேள்வி நேரத்தின்போது மதுரை மல்லிகைப்பூவை உலக அளவில் கொண்டு செல்வதற்காக மதுரையில் மல்லிகை ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும். அதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஏற்றுமதி மையம்
அந்த கடிதத்தில், திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் மல்லிகை மலர் ஏற்றுமதி மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க உள்ளதாகவும், மல்லிகை உற்பத்தியாக கூடிய மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மல்லியை மத்திய அரசு வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்வதற்காக மாநில அரசு திட்டம் வகுக்கும் என்பதையும் தெரிவித்து இருக்கிறார்.

இதே போல வேளாண் மற்றும் உணவு உற்பத்தி ஏற்றுமதி, வளர்ச்சி மையம் மூலம் மல்லிகை ஏற்றுமதியை அதிகரிக்க குழு அமைக்கப்படும். இதன் மூலம் மல்லிகை பூக்கள் ஏற்றுமதி குறித்த இடங்களை தேர்வு செய்து சர்வதேச அளவில் ஏற்றுமதி வளர்ச்சி பணிகள்தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மல்லிகை ஏற்றுமதி பற்றி வருங்காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும், 

அதில் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சேர்ந்து திட்டத்தை உருவாக்குவதற்கும் மத்திய அரசு இசைந்துள்ளது. இந்த நல்ல செய்தி. மதுரை மல்லிகையை பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் விவசாயத்திற்கும் வழிபிறக்கும்.

நன்றி
எனவே மதுரையில் மல்லிகை ஏற்றுமதி மையம் அமைக்கும் திட்டத்தை ஒரு முக்கியமான கட்டமாக நான் பார்க்கிறேன். இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு என்னுடைய சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை சட்டமன்றத்தில் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த மதுரை மல்லிகையை பற்றி நான் நாடாளுமன்றத்தில் பேசியதின் பயனாக ஒரு குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்றுமதி மையம் அமையும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் மல்லிப்பூ விவசாய உற்பத்தி அதிகரிக்கும்.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

Next Story