நாஞ்சிக்கோட்டை பகுதியில் மழைநீர் வடியாததால் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து அழுகி நாசம் விவசாயிகள் கவலை
நாஞ்சிக்கோட்டை பகுதியில் மழைநீர் வடியாததால் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து, எள் பயிர்கள் அழுகி நாசமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாஞ்சிக்கோட்டை,
நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள வல்லுண்டான்பட்டு, வேங்கராயன் குடிகாடு, அதினாம்பட்டு, கொல்லாங்கரை, மருங்குளம், கோபால் நகர், சாமிபட்டி, குருங்குளம் வாகரகோட்டை, தோழகிரிபட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவரி சாகுபடியாக மார்கழி பட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து, எள் பயிர்களை விவசாயிகள் விதைத்து சாகுபடியை மேற்கொண்டனர். நிலக்கடலை முளைத்து செடியாக வளர்ந்து இருக்கும் தருணத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து, எள் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி நாசமாகின. மேலும் மழை நீர் வடியாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நிவாரணம்
இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறியதாவது,
எனக்கு சொந்தமான நிலங்களில் நிலக்கடலை சாகுபடியை மார்கழி பட்டத்தில் செய்திருந்தேன். நிலக்கடலை செடி நன்கு வளர்ந்து பசுமையாக காட்சியளித்தது. தற்போது பெய்த மழையினால் நான் சாகுபடி செய்த நிலக்கடலை மழைநீரில் மூழ்கி அழுகி நாசமாகின. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story