ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை பதற்றம்- போலீஸ் குவிப்பு


ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை பதற்றம்- போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2021 11:13 PM GMT (Updated: 18 Jan 2021 11:13 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் சூசையப்பர் பட்டினம் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி மாடு விடும் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சூரிய மணல் கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் மாடுகளை ஓட்டிச்சென்றனர். சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர், சூரியமணல் கிராமத்தில் இருந்து மாடு விடுவதற்கு வந்த தரப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் சூரியமணல் கிராமத்தில் உள்ள எதிர் தரப்பினரின் 2 வீடுகளை சூறையாடினர். வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் 2 கிராமங்களிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

போலீசார் குவிப்பு

இதையடுத்து சம்பவ இடத்தில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இது குறித்து இருதரப்பினரும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story