தென் மாநிலங்களில் பருத்தி குடோன் அமைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு, சைமா கடிதம்


தென் மாநிலங்களில் பருத்தி குடோன் அமைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு, சைமா கடிதம்
x
தினத்தந்தி 21 Jan 2021 5:42 AM GMT (Updated: 21 Jan 2021 5:42 AM GMT)

தென் மாநிலங்களில் பருத்தி குடோன் அமைக்க வேண்டும் என சைமா சங்கம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

சைமா கடிதம்
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் வைகிங் ஏ.சி. ஈஸ்வரன், மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் பின்னலாடை துறை, தற்போது, கடும் நெருக்கடியை சந்தித்துவருகிறது. ஒசைரி நூல் விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு, ஜாப்ஒர்க் கட்டணம் மற்றும் ஆடை உற்பத்தி பொருட்கள் விலைகள் உயர்ந்துள்ளன.
நூல் விலை அடிக்கடி உயர்வதால் ஆடை விலையை நிர்ணயிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களை பெறமுடியாமலும், நிறுவனங்கள் தவிக்கின்றன. இந்திய பருத்திக்கழகம் (சி.சி.ஐ.) ஆடை உற்பத்தி துறையை கவனிக்க தவறுகிறது.

பருத்தி குடோன்
இதனால் பஞ்சு விலை உயர்ந்து நூல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரிய நிறுவனங்களுக்கு அதிகளவு பருத்தி வினியோகிக்கப்படுகிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கு, போதுமான அளவு பருத்தி வழங்குவதில்லை. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பஞ்சு விலையை நிலையாக வைத்திருக்க வேண்டும். சி.சி.ஐ., போன்ற அமைப்புகளே, தனியார் வியாபாரிகள் போல் நடந்து கொள்வது முறையல்ல.

கொள்முதல் செய்யும் பருத்தியை சி.சி.ஐ., வெளிமாநிலங்களில் இருப்பு வைக்கிறது. இதனால் தமிழக நூற்பாலைகள் அதிக தொகையை போக்குவரத்துக்காக செலவிட வேண்டியுள்ளது. எனவே, தென் மாநிலங்களில் பருத்தி குடோன் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றி பின்னலாடை துறையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story