பெருந்துறையில் வளர்ப்பு மகளை கர்ப்பிணியாக்கிய வியாபாரி போக்சோவில் கைது
பெருந்துறையில் வளர்ப்பு மகளை கர்ப்பிணியாக்கிய வியாபாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பெருந்துறை,
பெருந்துறை சென்னிமலை ரோடு தீயணைப்பு நிலையம் அருகில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 35). பழைய இரும்புகளை வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சாந்தி (34) என்கிற மனைவியும், ஆர்த்தி (17) என்ற மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் முருகேசன் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி சாந்தியின் ஒப்புதலுடன் அவரது தங்கை கவுசல்யா (24) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
கவுசல்யாவுக்கு தினேஷ் (9), விஜய் (6) என்ற 2 மகன்கள் பிறந்தனர். இந்நிலையில் சாந்தியின் உறவினர் பெண் ஒருவர் திண்டுக்கல் பகுதியில் இருந்து தன்னுடைய 13 வயது மகளுடன் முருகேசன் வீட்டுக்கு வந்து ஒன்றாக குடும்பம் நடத்தினார். 13 வயது சிறுமியை முருகேசன் வளர்ப்பு மகளாக பாதுகாத்து வந்தார். இதற்கிடையே முருகேசனின் முதல் மனைவி சாந்தி மகள் ஆர்த்தியுடன் ராசிபுரத்திற்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் வளர்த்து வந்த 13 வயது சிறுமியிடம் முருகேசன் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வற்புறுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த விஷயம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, அவருடைய தாய்க்கு தெரியவந்தது.
இதுபற்றி நியாயம் கேட்டபோது உன் மகளின் கர்ப்பத்தைக் கலைத்துவிடு என்று முருகேசன் மிரட்டியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் பெருந்துறை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தார்கள்.பின்னர் பெருந்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு சபினா, முருகேசனை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்
Related Tags :
Next Story