கெங்கவல்லியில் வீட்டுக்குள் டிராக்டர் புகுந்ததால் குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்


கெங்கவல்லியில் வீட்டுக்குள் டிராக்டர் புகுந்ததால் குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:13 AM GMT (Updated: 20 Feb 2021 12:13 AM GMT)

கெங்கவல்லியில் வீட்டுக்குள் டிராக்டர் புகுந்தது. இதில் 3 வயது குழந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வீட்டுக்குள் புகுந்த டிராக்டர்
கெங்கவல்லி பேரூராட்சியில் வடக்கு வீதியை சேர்ந்த அப்துல்லா (வயது 38). இவருடைய குழந்தை அஸ்லாம் (3). இந்த நிலையில் நேற்று வீட்டின் வெளியே அப்துல்லா தனது குழந்தையுடன் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் அப்துல்லாவின் வீட்டுக்குள் புகுந்தது. இதில் வீட்டின் முன் பகுதி இடிந்தது. மேலும் விபத்தில் அப்துல்லா, அஸ்லாம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்
கெங்கவல்லியில் இருந்து ஆணையம்பட்டி ஊராட்சிக்கு மணல் எடுத்துச் சென்ற போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மணல் கடத்தலை தடுக்க கோரி ஆத்தூர்-திருச்சி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக ஆத்தூர்-திருச்சி ரோட்டில் நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீட்டுக்குள் டிராக்டர் புகுந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டிராக்டர் டிரைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story