60 டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு


60 டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு
x
தினத்தந்தி 22 Feb 2021 7:29 PM GMT (Updated: 22 Feb 2021 7:29 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ராபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து 60 டன் பாசிப்பயறு ெகாள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்.பிப்
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ராபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து 60 டன் பாசிப்பயறு ெகாள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொள்முதல்
பாசிப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்துடனும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையிலும் பாசிப்பயறு கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் வேளாண் விற்பனை குழுவின் கீழ் இயங்கும் விருதுநகர், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் 60 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ள பாசிப்பயறில் இதர பொருட்கள் 2 சதவீதத்திற்கு மிகாமலும், இதர தானிய கலப்பு 3 சதவீதத்துக்கு மிகாமலும், சேதமடைந்த பருப்புகள் 3 சதவீதத்துக்கு மிகாமலும், சிறிதளவு சேதமடைந்த பருப்புகள் 4 சதவீதத்திற்கு மிகாமலும், வண்டுகள் தாக்கிய பருப்புகள் 4 சதவீதத்திற்கு மிகாமலும், ஈரப்பதம் 12 சதவீதத்துக்கு மிகாமலும் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான சராசரி தரங்களுடன் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிலோ ரூ.71.96 என்ற குறைந்தபட்ச விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
பயன் பெறலாம்
பாசிப்பயறு கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இம்மாவட்டத்தில் ஏப்ரல் 18-ந்தேதி வரை பாசிப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பாசிப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தின் அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளரை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறுமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story