ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 April 2021 5:07 AM GMT (Updated: 4 April 2021 5:07 AM GMT)

ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 3-வது தெருவில் நேற்று இரவு 7 மணியளவில் வாலிபர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஓட்டேரி மற்றும் தலைமைச்செயலக காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ டிரைவர்

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலையான வாலிபர், ஓட்டேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மதன் (வயது 30) என்பது தெரியவந்தது. மதன் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் காய்கறி விற்பனையும் செய்து வந்துள்ளார். இவருக்கு விஜி என்ற மனைவியும், கண்ணா என்ற மகனும் உள்ளனர்.

மேலும் மதன் மீது ஏற்கனவே தலைமை செயலக காலனி போலீசில் 1 கொலை வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மதனை கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பல் யார்? எதற்காக மதன் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story