கடற்பாசி உரத்தை பயன்படுத்தினால் மூலிகை பயிர்களில் அதிக விளைச்சல்
மூலிகை பயிர் உற்பத்தியில் கடல்பாசி உரங்களை பயன்படுத்தினால் கூடுதல் விளைச்சல் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது
மதுரை
மூலிகை பயிர் உற்பத்தியில் கடல்பாசி உரங்களை பயன்படுத்தினால் கூடுதல் விளைச்சல் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மூலிகைகள்
தமிழகத்தில் மூலிகைகள் நோய் தீர்க்கும் பாரம்பரிய மருந்துகளாக பயன்பாட்டில் உள்ளன. மேலும் மருந்து உற்பத்திக்காக தமிழகத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மூலிகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொதுவாக, மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் 90 சதவீத மூலிகைகள் காடுகளில் இருந்தே பெறப்படுகின்றன. அதே வேளையில், வணிக ரீதியாகவும் பல்வேறு மூலிகைகள் விவசாயிகளால் பயிரிடப்படுகின்றன. விவசாயிகள் மூலிகைகளை பயிரிடும்போது கூடுதல் விளைச்சலை பெற கடல்பாசி உரங்களை பயன்படுத்தலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தாவரவியல் உதவி பேராசிரியர் உதிரபாண்டி கூறியதாவது:- மூலிகைகளுக்கான தேவை இன்று உலக அளவில் அதிகரித்துள்ளது. உதாரணமாக பாம்புக்கடி, எய்ட்ஸ், மலேரியா, புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிறியாநங்கையில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. உலக அளவில் சுமார் 80 ஆயிரம் வகையான மூலிகைகள் மருந்து தயாரிப்புக்காக சேகரிக்கப்படுகின்றன.
கடல்பாசி
இன்றைக்கு மூலிகைகளின் உலகளாவிய மதிப்பு தெரிய வந்ததன் காரணமாக விவசாயிகள் மூலிகை சாகுபடியில் ஈடுபட தொடங்கி உள்ளனர். ரசாயன உரங்களை கொண்டு விளைவித்த பயிர்களை உண்ணும் போது சாதாரண வயிற்றுவலி முதல் புற்றுநோய் வரை பல பாதிப்பு ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க தற்போது நாங்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டோம். அதில், கடல்பாசியில் இருந்து தயாரிக்கப்படும் உரத்தை பயிர்களுக்கு பயன்படுத்தினால் அதிக விளைச்சலை பெற முடியும் என்று தெரியவந்தது. கடல்பாசியில் அதிக அளவு சோடியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், நைட்ரஜன் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.
வருமானம்
பாம்புக்கடி, எய்ட்ஸ், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க உதவும் சிறியாநங்கை மூலிகை சாகுபடியில் கடல்பாசி உரத்தை பயன்படுத்தியதால் அதிக விளைச்சலும், அந்த மூலிகையில் கூடுதலான மருத்துவ சத்துக்களும் இருந்ததை கண்டறிந்தோம்.
எனவே, மதுரை, விருதுநகர் உள்பட தமிழகத்தில் அதிக அளவில் மூலிகை பயிரிடும் இடங்களில் உள்ள விவசாயிகள் கடல்பாசியை உரமாக பயன்படுத்தி மூலிகைகளை சாகுபடி செய்யலாம். இதனால், மூலிகைகளின் ஏற்றுமதியின் போது அதிக வருமானம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story