கல்லணை கொள்ளிடம் ஆறு பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்


கல்லணை கொள்ளிடம் ஆறு பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 14 April 2021 4:03 PM GMT (Updated: 14 April 2021 4:03 PM GMT)

கல்லணை கொள்ளிடம் ஆறு பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் உள்ள காவிரி மற்றும் கல்லணை கால்வாயில் உள்கட்டமைப்பு நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பொதுப்பணித்துறை காவிரி வடிநில கோட்டத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். கல்லணையில் உள்ள காவிரி ஆறு பகுதியில் பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கொள்ளிடம் ஆறு

அதேபோல கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நீர் வெளியேறும் பகுதியில் உள்ள பழுதான தரைதளத்தில் நவீன முறையில் கான்கிரீட் அமைக்கும் பணிகள், மதகுகள் உள்ள பகுதியில் தரை தளத்தை வலுப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு தண்ணீர் வரும் இடத்தில் தண்ணீர் வரும் வேகத்தை தடுக்க தரை தள தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

மணல் மேடுகள்

கல்லணை தொடங்கி காவிரி ஆற்றில் நடுப்பகுதியில் அமைந்துள்ள மணல் மேடுகள், முட்புதர்களை அகற்றவும், தடுப்பணைகள் கட்டவும் திட்டமிடப்பட்டு பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். மேட்டூர் அணை நிரம்பி காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பு எந்தெந்த பணிகளை முடிக்க முடியுமோ? அந்த பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story