சீர்காழியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை


சீர்காழியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 April 2021 4:22 PM GMT (Updated: 15 April 2021 4:22 PM GMT)

சீர்காழியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.

சீர்காழி, 

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஆற்றில் சித்தமல்லி என்ற இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு நகராட்சி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சீர்காழி புற்றடிமாரியம்மன் கோவில் அருகில் உள்ள பிரதான சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி வந்தது. இதனால் ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வந்தது.

உடைப்பு சீரமைக்கப்பட்டது

இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, மேலாளர் காதர், பொறியாளர் தமயந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க நகராட்சி குடிநீர் பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து நேற்று புற்றடிமாரியம்மன் கோவில் அருகில் பிரதான சாலையில் ஏற்பட்ட குடிநீர் உடைப்பை சரி செய்வதற்காக பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை பணியாளர்கள் சீரமைத்தனர்.

தொடர்ந்து சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. உடைப்பை சரி செய்த நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story