சென்னை விமான நிலையத்தில் ரூ.33½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் (வயது 30), முகமது அப்பாஸ் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் அதிகாரிகளிடம் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லாததால் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Related Tags :
Next Story