முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் குறைந்த பயணிகளுடன் 168 விமான சேவை


முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் குறைந்த பயணிகளுடன் 168 விமான சேவை
x
தினத்தந்தி 26 April 2021 5:01 AM GMT (Updated: 26 April 2021 5:01 AM GMT)

முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் இருந்து 31 நகரங்களுக்கும், 34 நகரங்களில் இருந்து சென்னைக்கும் என குறைந்த பயணிகளுடன் 168 விமானங்கள் வந்து சென்றன.

ஆலந்தூர், 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சென்னை விமான நிலையங்களுக்கு நேற்று பயணிகள் வரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் குறைந்த பயணிகளுடன் விமான சேவை நடைபெற்றது.

அதன்படி சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஐதராபாத், மும்பை, கோவை, பெங்களூரூ, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, ஆமதாபாத், கவுகாத்தி, கொச்சி உள்பட 31 நகரங்களுக்கு 84 விமானங்கள் புறப்பட்டு சென்றன. இதில் 5,600 பேர் பயணம் செய்தனர்.

அதேபோல் 34 நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 84 விமானங்களில் 4,200 பேர் பயணித்தனர். முழு ஊரடங்கு காரணமாக மொத்தம் 168 விமானங்களே சென்னை விமான நிலையத்துக்கு வந்து சென்றன.

விமான நிலையத்தில் தங்கினர்

விமான நிலையங்களுக்கு பயணிகள் வாகனங்களில் வர அரசு அனுமதி அளித்து இருந்தாலும் பயணிகள் வரத்து குறைந்தே காணப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட விமானங்களில் 10-க்கும் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

மேலும் பிற நகரங்களில் இருந்து சென்னை வந்த தொழிலாளர்கள், முழு ஊரடங்கு காரணமாக விமான நிலையத்தில் இருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு மாநகர பஸ், மின்சார ரெயில்கள் இல்லாததால் விமான நிலையத்திலேயே தங்கி இருந்தனர்.

பல்வேறு கட்டுப்பாடுகள்

விமான பயணிகள் வரத்து குறைவுக்கு கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளதுடன், விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் பயணிகள் தங்கள் வெளியூர் பயணத்தை தவிா்ப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் பழையபடி இயல்பு நிலைக்கு விமான சேவைகள் வந்தன. இதனால் மார்ச் முதல் வாரத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இருந்தன. தமிழக அரசு இ-பாஸ் போன்ற தளர்வுகளை மீண்டும் அமல்படுத்தியதால் பயணிகள் வரத்து குறைந்தது. அதன்பிறகு 204 விமான சேவைகளாக குறைந்தது.

ஆனால் 2-வது அலை தீவிரமானதால் போதிய பயணிகள் இல்லாததால் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story