ஊட்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை


ஊட்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 1 May 2021 11:44 PM GMT (Updated: 1 May 2021 11:44 PM GMT)

ஊட்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஊட்டி

ஊட்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. நீலகிரியில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 54 பேர் வாக்களித்தனர். 

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 882 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 626 பேர் வாக்களித்தனர். கூடலூர் தொகுதியில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 155 பேரில், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 496 பேர் ஓட்டு போட்டனர். குன்னூர் தொகுதியில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 913 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 932 பேர் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கை

வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, 3 அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இந்த அறைகள் முன்பு மத்திய பாதுகாப்பு படையினர், தமிழக சிறப்பு பிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

இங்கு வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தலா 14 மேஜைகள்

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்பட 3 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளுக்கு 22 சுற்றுகள், குன்னூர் தொகுதியில் 280 வாக்குச்சாவடிகளுக்கு 20 சுற்றுகள், கூடலூர் தொகுதியில் 280 வாக்குச்சாவடிகளுக்கு 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளது. இதேபோல் பதிவான தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தொகுதி வாரியாக தலா 4 மேஜைகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீவிர சோதனை

வாக்கு எண்ணிக்கையையொட்டி ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு தற்காலிகமாக போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து உள்ளே வரும் வாகனங்களை தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். 

மேலும் உள்ளே வரும் நபர்களுக்கு அடையாள அட்டை உள்ளதா? என்று சரிபார்த்து அனுமதிக்கப்படுகிறது.கொரோனா பரவலை தடுக்க அரசியல் கட்சி முகவர்கள் உள்பட அனைவரும் தொற்று பாதிப்பில்லை என்ற ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.


Next Story