தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகபட்சமாக 16 மணி நேரம் நீடித்தது


தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகபட்சமாக 16 மணி நேரம் நீடித்தது
x
தினத்தந்தி 3 May 2021 7:19 PM GMT (Updated: 3 May 2021 7:19 PM GMT)

மடத்துக்குளம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவு 9 மணி நேரத்தில் முதலாவதாக வெளியானது. தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகபட்சமாக 16 மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு முடிவு வெளியிடப்பட்டது.

திருப்பூர்
மடத்துக்குளம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவு 9 மணி நேரத்தில் முதலாவதாக வெளியானது. தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகபட்சமாக 16 மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு முடிவு வெளியிடப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஒவ்வொரு தொகுதியிலும் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஒரு சில தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த எந்திரம் மட்டும் தனியாக வைக்கப்பட்டு அனைத்து சுற்றுக்கள் முடிந்த பின் கடைசியாக அந்த மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு மாலை 5.30 மணிக்கு முடிந்தது. 9 மணி நேரத்திற்குள் தேர்தல் முடிவு வெளியானது. அதற்கு அடுத்தபடியாக மாலை 6.30 மணி அளவில் உடுமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு வெளியானது.
காங்கேயம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு 7.30 மணிக்கு வெளியானது. திருப்பூர் தெற்கு தொகுதியில் வாக்கு எண்ணும் பணி 9 மணிக்கு முடிந்தது. பல்லடம், அவினாசி சட்டமன்ற தொகுதிகளில் இரவு 10 மணிக்கு தேர்தல் முடிவு வெளியானது.
எந்திரத்தில் கோளாறு
திருப்பூர் வடக்கு தொகுதியில் இரவு 11 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 25 சுற்றுகளை கொண்ட தாராபுரம் தொகுதி முதன்முதலாக வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 25-வது சுற்றில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து பா.ஜ.க. வேட்பாளர் முகவர்கள், தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியான தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். பழுதான எந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ண வேண்டும் என்று கூறினார்கள். சில வாக்குச்சாவடியில் மிக குறைந்த வாக்குகளே பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது. அதனால் சந்தேகம் இருப்பதாகவும் கூறினார்கள். இதனால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு உயர் அதிகாரியிடம் தேர்தல் நடத்தும் அதிகாரி பேசிவிட்டு பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வாக்குகளை தொடர்ந்து எண்ணுவதற்கு உத்தரவிட்டார். மேலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது என்றும் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது என்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கூறினார். இது தொடர்பாக நீங்கள் கோர்ட்டை நாடலாம் என்றும் தெரிவித்தார்.
16 மணி நேரம்
பின்னர் குலுக்கல் முறையில் ஐந்து விவிபேட் எந்திரங்கள் தேர்வு செய்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தபால் ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. நள்ளிரவு 12.30 மணிக்கு தாராபுரம் தொகுதியில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. 16 மணி நேரம் கழித்து தேர்வு முடிவு வெளியானது. 

Next Story