விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் சாவு மேலும் 196 பேருக்கு நோய் தொற்று


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் சாவு மேலும் 196 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 4 May 2021 5:02 PM GMT (Updated: 4 May 2021 5:02 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்தனர். மேலும் 196 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 20,043 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 125 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 17,579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 2,339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த 77 வயதுடைய முதியவரும், கல்பட்டு கிராமத்தை சேர்ந்த 75 வயதுடைய முதியவரும், விழுப்புரம் ஜெகதாம்பேட்டையை சேர்ந்த 54 வயதுடையவரும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 125-ல் இருந்து 128 ஆக உயர்ந்துள்ளது.

196 பேருக்கு நோய் தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் ஒரே நாளில் 196 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,239 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,829 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 2,283 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story