ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.12½ கோடி ஒதுக்கீடு


ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.12½ கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 4 Jun 2021 5:11 PM GMT (Updated: 4 Jun 2021 5:11 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்காக ரூ.12½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நுண்ணீர் பாசனம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு, பொன்னை, கொசஸ்தலை ஆறு பாசன பகுதிகள் தவிர பிற பகுதிகள் மானாவாரி மற்றும் தோட்டக்கால் பகுதியாகும்.‌ நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் பயிர் செய்யலாம். இதனால் 70 சதவீதம் வரை நீரை சேமிக்கலாம். நீரில் கரையும் உரங்களை சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக இடுவதால் உரச் செலவும் குறையும். 

தண்ணீர் பயிர்களின் வேர்களுக்கு அருகாமையில் விழுவதால் தேவையற்ற களைகள் வராமல் தடுக்கப்படுவதோடு மண்ணில் காற்றோட்டம் ஏற்படுகிறது. நுண்ணீர் பாசனம் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

10 சதவீதம் மானியம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இறவை பயிர்களும், 11,800 ஏக்கர் பரப்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இறவைப் பயிர்களின் மகசூலை அதிகரிக்கவும், மானாவாரி நிலங்களை இறவைக்கு கொண்டு வரும் வகையில் கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனமும், மணிலா, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனமும் அமைக்கலாம். மழை தூவுவான் உள்ளிட்ட கருவிகளை அமைத்து பயன் பெறலாம்.

இத்திட்டத்தில் பங்கு பெறும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் புதிதாக மின் இணைப்பு பெற்று நுண்ணீர் பாசனம் பெறும் விவசாயிகளுக்கு மின்மோட்டார், பைப்புகள், தரை நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைத்திட மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.12½ கோடி ஒதுக்கீடு

சொட்டு நீர் பாசன குழாய்கள் பதிப்பதற்கான பள்ளம் தோண்ட ஏக்கருக்கு ரூ.3000 வீதம் 2 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படுகிறது. மொத்தம் இத்திட்டத்திற்காக ரூ.12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த விருப்பமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், 2 புகைப்படம், சிறு, குறு விவசாயி எனில் அதற்கான வருவாய்த்துறை சான்று, மண் மற்றும் நீர் மாதிரி ஆய்வு முடிவு அறிக்கை ஆகியவற்றுடன் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story