கோயம்பேடு வணிக வளாகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் வியாபாரம் செய்ய தடை


கோயம்பேடு வணிக வளாகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் வியாபாரம் செய்ய தடை
x
தினத்தந்தி 4 Jun 2021 11:59 PM GMT (Updated: 4 Jun 2021 11:59 PM GMT)

கோயம்பேடு வணிக வளாகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களுக்கு வியாபாரம் செய்ய தடை விதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் ஷங்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு வணிக வளாகத்தில் இருந்து காய்கனி மற்றும் பூக்களை கொள்முதல் செய்து தங்கள் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். இங்கு வியாபாரம் மேற்கொள்ளும் அனைத்து வணிகர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்த வளாகத்தில் அமைந்துள்ள மாநகராட்சியின் மினி கிளினிக்கில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

டிரைவர்களுக்கு தடுப்பூசி

இதுநாள் வரை சுமார் 4,800 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து இங்கு வரும் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த, மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் தினசரி 300 முதல் 500 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வணிகர்கள் கடைபிடிப்பதை மேலும் தீவிரப்படுத்தி கண்காணிக்கும் வகையில் போலீசார் மூலம் கண்காணிக்க ஒலிபெருக்கி அறிவிப்புடன் கூடிய உயர் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விற்பனை செய்ய தடை

கோயம்பேடு வணிக வளாகத்திலும் தூய்மையை பராமரிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களுக்கு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரம் மேற்கொள்ள தடை விதிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் முககவசம் அணியாமல் இருந்த 1,731 நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 699 அங்காடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் ஷங்சோங்கம் ஜடக் சிரு தெரிவித்தார்.

Next Story