ரத்தினகிரி அருகே; டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு


ரத்தினகிரி அருகே; டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 9 Jun 2021 6:01 PM GMT (Updated: 9 Jun 2021 6:01 PM GMT)

ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆற்காடு

ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ்மாக்கடை சுவரில் துளை

கொரோனா 2-ம் அலை பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமல்படுத்தி வருகிறது. 

ஊரடங்கு உத்தரவு அறிவித்த நாள் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதில் இருந்த மது பாட்டில்கள் கடையிலேயே வைக்கப்பட்டு கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த தென்நந்தியாலம் அருகே விவசாய நிலங்களுக்கு நடுவில் டாஸ்மாக் கடை உள்ளது. 

நேற்று காலை இந்த டாஸ்மாக் கடையின் பின்பக்கமாக சுவரில் துளையிடப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் திருடப்பட்டு இருந்தன.

போலீசார் விசாரணை 

இதனைப் பார்த்தவர்கள் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 

சுமார் 2 அடி அகலத்திற்கு டாஸ்மாக் கடையின் பின்புற சுவரில் துளையிட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 13 பெட்டி மதுபாட்டில்கள் திருடப்பட்டிருந்தது. இவற்றை திருடியவர்கள் வயல்வெளியில் வைத்து அந்தப் பெட்டியில் இருந்த மது பாட்டில்களை எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஸ்ரீதர் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரூ.1 லட்சம் மதிப்பு

காலி பெட்டிகளை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். திருட்டுபோன மது பாட்டில்களில் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுவரில் துளையிட்டு நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story