பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் உள்பட 29 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் உள்பட 29 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 2:53 PM GMT (Updated: 11 Jun 2021 2:53 PM GMT)

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் உள்பட 29 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் உள்பட 29 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் 29 இடங்களில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் திண்டுக்கல்லில், பெரியார் சிலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பொட்டு செல்வம், ஜோதிராமலிங்கம், வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அரை நிர்வாண கோலத்தில் கலந்துகொண்டனர். பின்னர் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, சங்கு ஊதி சேகண்டி அடித்து பெட்ரோல், டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மனித உரிமைத்துறை அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
காட்டாஸ்பத்திரி
திண்டுக்கல்லில், வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அப்துல்ரகுமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் காட்டாஸ்பத்திரி, குள்ளனம்பட்டி, ரவுண்டு ரோடு, பேகம்பூர், பழனி ரோடு, போலீசார் குடியிருப்பு அருகில், ஒத்தக்கடை உள்பட திண்டுக்கல்லில் 14 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான கொடைக்கானல், நிலக்கோட்டை உள்பட மேலும் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
அதன்படி, கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 
நத்தம், நிலக்கோட்டை
இதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே கதிர்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் முன்பு ஆத்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், வத்தலக்குண்டுவில் வட்டார தலைவர் காமாட்சி தலைமையிலும், மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நத்தத்தில் அரசு மருத்துவமனை முன்பு நகர தலைவர் முகமது அலி தலைமையிலும், நிலக்கோட்டையில் அணைப்பட்டி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு வட்டார தலைவர் கோகுல்நாத் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story