ஏரியில் மூழ்கி 2 பேர் பலி


ஏரியில் மூழ்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Jun 2021 6:49 PM GMT (Updated: 12 Jun 2021 6:49 PM GMT)

செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள சி.என். பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 28). முனியன் மகன் மனோகருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதே பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் முனியன் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை புவனேஸ்வரி, அவரது சகோதரியின் மகன் விஜய்(22) மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள பனமலை ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். 
அங்கு அவர்கள் அனைவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர்.

2 பேர் பலி

இதற்கிடையே புவனேஸ்வரி எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த விஜய் தனது சித்தி புவனேஸ்வரியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். 
இதையடுத்து அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய புவனேஸ்வரி, விஜய் ஆகியோரை பிணமாக மீட்டனர்.

சகோதரரின் திருமணம்

இதை பார்த்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது. 
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேர் உடல்களையும் பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 
பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சகோதரரின் திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளையின் தங்கை மற்றும் அக்காள் மகன் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story