மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்


மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 July 2021 6:21 AM GMT (Updated: 4 July 2021 6:21 AM GMT)

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூர்,

தமிழகத்தில் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர்கள், மீன் வளர்ப்போர் சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள், மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இணையதளத்தில் விண்ணப்பங்கள்

இத்திட்டத்தின் கீழ் பொதுபிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1 கோடியே 25 லட்சம்) மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1 கோடியே 50 லட்சம்) வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story