ரூ.60 கோடி லஞ்சம் பெற்றதாக எடியூரப்பா, மகன் உள்பட 6 பேர் மீது ஊழல் தடுப்பு படையில் புகார்


ரூ.60 கோடி லஞ்சம் பெற்றதாக எடியூரப்பா, மகன் உள்பட 6 பேர் மீது ஊழல் தடுப்பு படையில் புகார்
x
தினத்தந்தி 15 July 2021 8:56 PM GMT (Updated: 15 July 2021 8:56 PM GMT)

கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி நியமனம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி லஞ்சம் பெற்றதாக, முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் உள்பட 6 பேர் மீது ஊழல் தடுப்பு படையில், சமூக ஆர்வலரான ஆபிரகாம் என்பவர் புகார் கொடுத்து உள்ளார்.

பெங்களூரு:
  
ரூ.60 கோடி லஞ்சம்

  பெங்களூருவில் வசித்து வரும் சமூக ஆர்வலரான ஆபிரகாம் என்பவர் ஊழல் தடுப்பு படையில் ஒரு புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருந்ததாவது:-

  கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்த சுதீந்திரா ராவ், தன்னை அந்த பணிக்கு நியமனம் செய்ய ரூ.9¾ கோடி லஞ்சம் கொடுத்ததாக கன்னட தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி கொடுத்து உள்ளார். இதுதவிர கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல பணிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் வாங்கப்பட்டு உள்ளது.

எடியூரப்பா, மகன் மீது புகார்

  இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, பெங்களூரு நகர மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், எடியூரப்பாவின் உறவினருமான மரியசாமி, எடியூரப்பாவின் மகனும், கர்நாடக பா.ஜனதா துணை தலைவருமான விஜயேந்திரா, எடியூரப்பாவின் பேரன் சசிதர் மரடி, எடியூரப்பாவின் மருமகன் சஞ்சய்ஸ்ரீ, மகள் பத்மாவதி விருபாக்சப்பா ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது.

  லஞ்சம் கொடுத்தார் என்பதற்காக எந்த தகுதியும் இல்லாத போதும் சுதீந்திரா ராவை, எடியூரப்பா கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமித்து உள்ளார். இவர்கள் 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தல்

  மேலும் தான் கொடுத்த புகாாின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஊழல் தடுப்பு படை அதிகாரிகளிடம், ஆபிரகாம் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story