வாணாபுரம் பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பை மேம்படுத்த வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


வாணாபுரம் பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பை மேம்படுத்த வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Aug 2021 12:17 PM GMT (Updated: 25 Aug 2021 12:17 PM GMT)

வாணாபுரம் பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பை மேம்படுத்த வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணாபுரம்

வாணாபுரம் பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பை மேம்படுத்த வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இழப்பீடு தொகை

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் விவசாயம் மிக முக்கிய தொழிலாக உள்ளது. அப்பகுதியில் பிரதான பயிராக கரும்பு, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.

பருவ கால பயிர்களும் அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். எந்தப் பயிர் பயிரிடப்பட்டாலும் அதற்கு தற்போது அரசு காப்பீடு செய்யுங்கள் என அறிவுறுத்தி வருகிறது. 

பயிரில் நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு உண்டான இழப்பீட்டு தொகையை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தச்சம்பட்டு, பெருங்குளத்தூர், தானிப்பாடி, தண்டராம்பட்டு, மோத்தகல் உள்ளிட்ட பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. 

அதற்காக 100-க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடி பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான கூடாரங்கள் உள்ளிட்டவைகளை அமைக்கப்பட்டுள்ளன. 

அதற்கு உண்டான பட்டுப் புழுக்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்காக அரசு மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பட்டுப்புழு வளர்ப்பதற்கு உண்டான மானியம் உள்ளிட்டவைகள் வழங்கப்படவில்லை, எனக்கூறப்படுகிறது. 

மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளிடம் தகவல் கேட்டால் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, எனத் தெரிகிறது. 

பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பட்டுப்புழு வழங்க வேண்டும்

கடந்த 4, 5 ஆண்டுக்கு முன்பு பட்டுப்புழுவை உற்பத்தி செய்து, அதை கிலோ ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.600 வரை விற்பனை செய்து வந்தோம்.

 ஆனால் தற்போது தரமான பட்டுப்புழுவை அரசு தருவது இல்லை. இதனால் குறைந்த விலைக்கு பட்டு நூல்களை வாங்கி செல்கின்றனர். 

வியாபாரிகள் மேலும் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும். 

30 முதல் 40 ஆண்டுகள் இந்தப் பயிரை பயிரிட்டு பராமரித்து வந்த நிலையில் தற்போது மனவேதனையுடன் மல்பெரி செடிகளை அழித்து மாற்றுப் பயிருக்கு செல்லக் கூடிய சூழல் நிலவி வருகிறது. 

பட்டுப்புழு வளர்ப்பு முறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தொடர்ந்து தரமான பட்டுப்புழுைவ அரசு வழங்க வேண்டும், மானியமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story