சென்னை ஆடிட்டர் கொன்று புதைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி, வக்கீல் உள்பட 10 பேரிடம் விசாரணை கார் பறிமுதல் பரபரப்பு தகவல்கள்


சென்னை ஆடிட்டர் கொன்று புதைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி,  வக்கீல் உள்பட 10 பேரிடம் விசாரணை கார் பறிமுதல் பரபரப்பு தகவல்கள்
x

சென்னை ஆடிட்டரை கடத்தி கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி, வக்கீல் உள்பட 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து ஆடிட்டரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்லாவி:
சென்னை ஆடிட்டரை கடத்தி கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி, வக்கீல் உள்பட 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து ஆடிட்டரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை ஆடிட்டர் 
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் (வயது 48). கடந்த 27-ந் தேதி காரில் கிருஷ்ணகிரிக்கு வந்த இவர் மாயமானார். இது குறித்து அவரது மனைவி பூர்ணிமா பிரதான் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் பண விவகாரத்தில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை கொலை செய்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் உடலை புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆடிட்டரின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
பண விவகாரத்தில் கொலை 
கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் சென்னையில் இருந்து கடந்த 26-ந் தேதி காரில் வந்துள்ளார். அவருடன் வக்கீல் கிருஷ்ணகுமார் என்பவரும் வந்தார். இவர்களின் நண்பர் சபரீஷ் மற்றொரு காரில் வந்தார். இவர்கள் வேலூரில் வேலையை முடித்துக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்தார்கள்.
இதன் பிறகு தான் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் மாயமானதால் அவருடன் வந்த வக்கீல் கிருஷ்ணகுமார், நண்பர் சபரீஷ் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பண விவகாரத்தில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
10 பேரிடம் விசாரணை 
இதைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளி, பெங்களூரு பிரமுகர்கள், கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானுடன் பணிபுரிந்த சிலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. 
இந்த கொலையில் வக்கீல் கிருஷ்ணகுமார், சபரீஷ், திருமால், கோபி, சிவன், மணிவண்ணன் ஆகிய 6 பேரிடம் நேற்று முன்தினம் முதல் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சாமல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் (42), மத்தூர் திருப்பதி (48), பெங்களூரு கே.ஆர்.புரா பிரசாந்த் (43), லோகா (47) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய புள்ளிகள் சிக்குகிறார்கள் 
இவர்கள் 10 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. அதே போல கொலையுண்ட ஜனரஞ்சன் பிரதான் ஓட்டி வந்த கார் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கே.ஆர்.புராவில் மீட்கப்பட்டது. இந்த கொலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story