சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்த பயணிகள்


சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்த பயணிகள்
x
தினத்தந்தி 9 Sep 2021 12:52 AM GMT (Updated: 9 Sep 2021 12:52 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து 4 விமானங்களில் வந்த பயணிகள், குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் பன்னாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு அனுமதி பெற்ற நாடுகளுக்கு மட்டும் விமான சேவை செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளன.வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், 72 மணி நேரத்துக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவுக்கு வரும் விமானங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒரே நேரத்தில் 4 விமானங்கள்
இந்த நிலையில் நேற்று ஒரே நேரத்தில் குவைத், தோகா, சார்ஜா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து அடுத்தடுத்து 4 விமானங்கள் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை கவுண்ட்டர்களில் உள்ள அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சோதனை செய்ய வரிசையில் நின்றனர்.

4 விமானங்களில் வந்த பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களுக்கு வந்ததால் அதிகப்படியான கூட்டம் அலைமோதியது. ஆனால் 3 கவுண்ட்டரில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியை மறந்து பயணிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு நின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

பயணிகள் வாக்குவாதம்
விமான நிலையத்தில் 3 குடியுரிமை சோதனை கவுண்ட்டர்கள் மட்டுமே செயல்பட்டதாகவும், மீதம் இருந்த கவுண்ட்டர்களில் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் விமான பயணிகள் வெகு நேரமாக ஒருவர் மேல் ஒருவர் இடித்தபடி நீண்ட வரிசையில் காத்து நின்றதால் கொரோனா முன்னெச்சரிக்கையாக எந்த ஏற்பாடுகளும் சரியாக செய்யவில்லை என்று கூறி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கூடுதலாக மேலும் 2 சோதனை கவுண்ட்டர்களை திறந்தனர். விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டரில் ஒரே நேரத்தில் அதிகப்படியான பயணிகள் குவிந்து இருப்பதை பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Next Story