தந்தை சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் வாலிபர் தற்கொலை


தந்தை சிகிச்சை பெறும்  அரசு மருத்துவமனையில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 13 Sep 2021 8:31 PM GMT (Updated: 13 Sep 2021 8:31 PM GMT)

திண்டுக்கல்லில் கடன் தொல்லையால் தந்தை சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்: 

கடன் தொல்லை 
திண்டுக்கல் சவுராஷ்டிராகாலனியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் ஒரு ஓட்டலில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 24). இவர் திண்டுக்கல்லில் ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்தார். இந்த நிலையில் காளிதாஸ் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடனை தந்தையும், மகனும் வேலை செய்து செலுத்தி வந்தனர்.

எனினும் கடனை முழுமையாக செலுத்த முடியாததால் அவர்கள் தவித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு காளிதாசுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தந்தைக்கு உதவியாக நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் தற்கொலை 
அப்போது கடனை செலுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை நினைத்து கார்த்திகேயன் மனவேதனை அடைந்தார். இதுகுறித்து தனது சகோதரியிடம் கூறி அவர் புலம்பினார். அவருக்கு, சகோதரி ஆறுதல் கூறி இருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் இடத்தில் கார்த்திகேயன், காது மற்றும் வாயில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். 

மேலும் அவருடைய தலையில் காயம் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த வடக்கு போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் கடன் தொல்லையால் கட்டிடத்தில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் தந்தை சிகிச்சை பெறும் மருத்துவமனையில் மகன் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story