புழல் ஏரியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: சென்னை மாநகருக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம்


புழல் ஏரியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: சென்னை மாநகருக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 27 Sep 2021 10:46 AM GMT (Updated: 27 Sep 2021 10:46 AM GMT)

சென்னை மாநகருக்கு அதிகபட்சமாக 1,000.58 மில்லியன் லிட்டர் குடிநீர் நேற்று வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்ய உதவும் ஏரிகளில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 2 ஆயிரத்து 492 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 646 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3 ஆயிரத்து 24 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 459 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 934 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொண்ட வீராணம் ஏரியில் 990.42 மில்லியன் கன அடி சேமிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியும், தற்போது 10 ஆயிரத்து 545.42 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஆண்டு ஏரிகளில் நீரை சேமிக்க ஓரளவு பருவ மழை கைகொடுத்தது. அத்துடன் தமிழக அரசுடன் ஆந்திர மாநில அரசு செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 18-ந் தேதி முதல் கடந்த வாரம் வரை நீர் திறக்கப்பட்டதில் 5 டி.எம்.சி. நீர் கிடைத்து உள்ளது.

குடிநீர் வினியோகம்

சென்னை மாநகரின் மொத்த மக்கள் தொகை 1 கோடியே 12 லட்சத்து 35 ஆயிரத்து 18 என்று மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவர்களுக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி. வரை குடிநீர் தேவைப்படுகிறது. அந்த வகையில் சென்னை மாநகருக்கு குடிநீர் குழாய்கள் மூலம் 929.38 மில்லியன் லிட்டரும், லாரிகள் மூலம் 30.10 மில்லியன் லிட்டரும், தொழிற்சாலைகளுக்கு 22.35 மில்லியன் லிட்டரும் வினியோகிக்கப்பட்டது.

இதுதவிர மொத்தமாக கொள்முதல் செய்பவர்களுக்கு 18.75 மில்லியன் லிட்டர் வீதம் 1,000.58 மில்லியன் லிட்டர் குடிநீர் நேற்று வினியோகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் 700.26 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மணல் மூட்டைகள் அடுக்கும் பணி

குடிநீர் வினியோகம் அதிகரிப்புக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், குடிநீரை தேவைக்கு முழுமையாக பயன்படுத்தலாம். மாறாக வீணடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன் புழல் ஏரி நிரம்புவதற்கு 276 மில்லியன் கன அடி மட்டுமே தேவை என்பதால் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு சென்ற நிலையில், அவருடைய உத்தரவை ஏற்று, வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் அடுக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story