மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வோர் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை


மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வோர் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை  கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Oct 2021 4:03 PM GMT (Updated: 1 Oct 2021 4:03 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முறைகேடாக மதுபாட்டில்களை மொத்தமாக வாங்குவோர் மற்றும் விற்பனை செய்யும் மதுக்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீவிர கண்காணிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதி கரியப்பா நகரைச்சேர்ந்த சரவணன் மற்றும் வேலு ஆகியோர் அரசு மதுக்கடையில் இருந்து சுமார் 1,920 மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் பணியிடை நீக்கம்

இந்த விசாரணையில் இவர்கள் கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து மொத்தமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் மேற்பாற்வையாளர் பெரியசாமி, விற்பனையாளர்கள் முனுசாமி, பாலு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் பணியிடை நீக்கம்செய்யப்படுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முறைகேடாக மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் கடையின் பணியாளர்கள் மற்றும் மொத்தமாக வாங்குவோர் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story