ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை


ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 12 Oct 2021 11:16 PM GMT (Updated: 12 Oct 2021 11:16 PM GMT)

ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செல்போனை பறித்து சென்ற ஆத்திரத்தில் ரவுடியை கொன்றதாக அண்ணன்-தம்பி இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

சென்னையை அடுத்த மணலி, எடப்பாளையம், ஜீவானந்தம் தெருவைச் சேந்தவர் குட்டி என்ற ராஜசேகரன் (வயது 27). பிரபல ரவுடியான இவர், ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம்தான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதற்காக மணலி போலீஸ் நிலையத்தில் கடந்த 2-ந்தேதி முதல் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மணலி சின்ன சேக்காடு பார்த்தசாரதி குறுக்கு தெருவில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து ராஜசேகரன் மது குடித்து கொண்டு இருந்ததாக தெரிகிறது.

வெட்டிக்கொலை

அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ராஜசேகரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, பின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மணலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய ராஜசேகரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

செல்போன் பறிப்பு

மேலும் இதுதொடர்பாக மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த மாதம் ரவுடி ராஜசேகரன், அவரது நண்பர் ஜெயக்குமார் என்பவருடன் சேர்ந்து சின்னசேக்காடு அப்துல் கலாம் நகரைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (26), அவருடைய தம்பி சதீஷ் என்ற சதீஷ்குமார் (25) ஆகியோரை தாக்கி, அவர்களிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி, அவரது தம்பி சதீஷ் இருவரும் சேர்ந்து, ரவுடி ராஜசேகரனை வெட்டிக்கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அண்ணன்-தம்பியான விக்கி, சதீஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story