கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரை 3-வது ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்


கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரை 3-வது ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2021 11:14 PM GMT (Updated: 21 Oct 2021 11:14 PM GMT)

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 3-வது ரெயில் பாதை அமைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதை ஏற்று தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.256 கோடியில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 3-வது ரெயில் பாதையில் கடந்த செப்டம்பர் மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று மதியம் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் வரை சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சிறப்பு ரெயில் ஒன்றை இயக்கி வேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தெற்கு வட்டம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இதனை ஆய்வு செய்தார். இதற்காக தாம்பரத்தில் இருந்து 4 டிராலிகளில் கூடுவாஞ்சேரி பகுதிக்கு சென்டிரல் ரெயில்வே அதிகாரிகள் சென்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயிலை சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் தாம்பரம் நோக்கி இயக்கி வெற்றிகரமாக வேக சோதனை ஓட்டத்தை நிறைவேற்றினர்.

இதையொட்டி தண்டவாள பாதைகள் அருகில் உள்ள குடியிருப்பு பொதுமக்கள் தண்டவாளங்களை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என தெற்கு ரெயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


Next Story