ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 18 Nov 2021 5:31 PM GMT (Updated: 18 Nov 2021 5:31 PM GMT)

பெரியகுளத்தில் விபத்தில் விடுதி மேலாளருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் ஜப்தி செய்தார்.

பெரியகுளம்: 


பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் காளிசரண் (வயது 42). தனியார் விடுதி மேலாளர். இவர், கடந்த 2016-ம் ஆண்டு தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காளிசரணுக்கு கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த விபத்தில் பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்க கோரி கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் காளிசரணுக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் அவருக்கு இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதையடுத்து காளிசரண் நிறைவேற்றுதல் மனு ஒன்றை பெரியகுளம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து, இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் பெரியகுளம் பஸ்நிலையத்தில் மதுரை செல்ல இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் ரமேஷ் நேற்று ஜப்தி செய்தார்.


Next Story